List

  • Main
  • Over View

Saturday, January 2, 2016

mushroondev

உணவுக்காக பயன்படுத்தப்படும் காளான்

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புரதம் நிறைந்த உணவுப் பொருள்களின் தேவை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நவீன யுகத்தில் உள்ள பல்வேறுபட்ட மரபு சாரா புரதச்சத்துக்கான உணவுப் பொருள்களில் காளான் மூலம் கிடைக்கும் புரதச்சத்து வளர்ந்து வரும் மேலை நாடுகளில் சிறந்த புரதச்சத்து உணவாக கருதப்படுகின்றது. மேலும் காளான்களின் புரதம் மாற்றும் திறன், புரதம் உற்பத்தித் திறன், தாவரப் பயிர் வகை புரதம் மற்றும் விலங்கு புரதத்தினைவிட சிறந்து காணப்படுகிறது.
காளாண் என்பது பூஞ்சான வகையைச் சார்ந்தது. உலகில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ளன. அவற்றுள் 100 வகை காளான்கள் மட்டும் நச்சுத் தன்மையற்றவையாகவும், உணவாகவும் பயன்படுத்தப்படக்கூடிய வகையாகும். இக்காளான்களில் 90 சதவீதம் ஈரப்பதமும், அதிகளவில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதமும், அமினோ அமிலங்களும் மற்றும் நுண் ஊட்டச் சத்துக்களும், வைட்டமின்களும் உள்ளன.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் வாயிலாக கோ.1, எம்.2, ஏ.பி.கே.1, எம்.டி.யு. மற்றும் ஊட்டி 1 போன்ற சிப்பிக் காளான் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது பால் காளான் (ஏ.பி.கே.2) தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் வெளியிடப்பட்டு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பூஞ்சான உணவுக் காளான்களில் உள்ள ஈரப்பதம் காரணமாக காய்கறி மற்றும் பழங்களை போன்று எளிதில் கெட்டுவிடும் தன்மையுடையது.
ஆதலால் அதை பதப்படுத்தி பாதுகாத்தல் அவசியமாகும். காளான்களை அறுவடைக்குப் பின் அவற்றின் தேவைக்கு ஏற்பட சேமித்து வைக்கும் முறைகளை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று குறுகிய கால சேமிப்பு, மற்றொன்று நீண்ட கால சேமிப்பு.

உலர் முறையில் பதப்படுத்துதல்

காளான் உலர் முறையில் மிதவைப்படுகை முறை உலர்த்துதலில் உலர்த்தப்படும் பொருள் மிதவை நிலையில் இருப்பதால் ஈரப்பதம் எளிதில் நீக்கப்படுவதுடன் தரமும் பாதுகாக்கப்படுகிறது. இம்முறையில் காளானை உலர வைக்க ஒரு மிதவைப் படுகை உலர்த்தியை வேளாண் பல்கலைக்கழகம் வேளான் பதன்செய் துறையில் வடிவமைத்துள்ளது.
மிதவைப்படுகை உலர்த்தியில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிமிடத்துக்கு 35 மீ காற்று ஓட்டவீதத்தில் காளான்களை எளிதில் உலர்த்தலாம். இவ்வாறு உலர்த்தப்பட்ட காளானின் தரம் மேம்பட்டதாகவும் உள்ளது என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 12 சதவீத ஈரப்பதம் உள்ள நிலையில் காளான்களை காற்றுப் புகா வண்ணம் பெட்டிகளில் அடைத்து வைத்தால் குறைந்தது ஓராண்டுக்கு அவைகள் கெடாமல் இருக்கும். இந்த உலர்த்தியின் விலை ரூ.20 ஆயிரம்.

உறைய வைத்து பதப்படுத்துதல்

பிளான்சிங் செய்யப்பட்ட காளான்களை பாலித்தின் பைகளில் நிரப்பி அவற்றை 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உறைய வைத்து பாதுகாக்கலாம். இம்முறையில் தரம் நீண்ட நாள்களுக்கு பாதுகாக்கப்பட்டாலும் இதற்கான செய்யப்படும் செலவு காரணமாக இம்முறையை பொதுவாக பின்பற்றப்படுவதில்லை.

உறைந்த பின் காயவைத்துப் பதப்படுத்துதல்

இம்முறையில் காளான்களை 30 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைப்பதால் அதில் உள்ள நீரானது பனிக்கட்டிகளாக மாறி விடுகின்றது. பின்பு அவற்றை வெற்றிடத்துக்கு உட்படுத்துவதால் பனிக்கட்டிகள் பதங்கமாதல் முறையில் நீக்கப்படுகின்றது. இவ்வாறு நீக்கப்பட்ட காளான் ஈரப்பதம் 3 சதவீதமாக இருக்கும். இம்முறையில் உலர்த்த சுமார் 12-16 மணி நேரம் ஆகின்றது. இவ்வாறு பதப்படுத்தப்பட்ட காளானின் தரம் உயர்ந்ததாக இருக்கும்.
கதிரியக்கத்துக்குட்படுத்தி பாதுகாத்தல்
காளானை கோபால்ட் - 50 என்றும் கதிரியக்கப் பொருளின் கதிரியக்கத்துக்கு உட்படுத்தி 15 டிகிரி செல்சியல் வெப்பநிலை மற்றும் 90 சதவீதம் ஈரப்பதத்தில் வைத்திருப்பதன் மூலம் சுமார் 12 முதல் 16 நாள்கள் வரை கெடாமல் பாதுகாக்க முடியும்.
சவ்வூடு பரவல் முறையில் பதப்படுத்துதல்
பொதுவாக உப்புக் கரைசலோ, சர்க்கரை கரைசலோ அல்லது இரண்டும் சேர்ந்த கரைசலோ சவ்வூடு கரைசலாக பயன்படுத்தப்படுகிறது. இச்சவ்வூடு கரைசலில் காளான்களை 30 நிமிடங்கள் வைத்திருப்பதால் அவற்றில் உள்ள ஈரப்பதம் 50 சதவீத அளவுக்கு வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு ஈரப்பதம் குறைக்கப்பட்ட காளான்கள் வெப்பக் காற்றின் உதவியால் உலர்த்தப்பட வேண்டும்.
நிலையான வளி அழுத்த சூழலில் பாதுகாத்தல்
இந்த முறையில் காளான் வைக்கப்பட்டிருக்கும் சூழலில் கரியமில வாயு மற்றும் பிராணவாயு அளவினைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவற்றின் சுவாசிக்கும் தன்மை பாதிக்கப்படுகின்றது, இவ்வாறு செய்வதன் மூலம் காளான்களை சேமித்து வைக்கும் காலம் அதிகரிப்படுவதுடன் காளான் பழுப்பு நிறமாவது தடுக்கப்படுகின்றது.

காளான் ஊறுகாய்

காளானை ஊறுகாய் செய்து பாதுகாப்பது மூலம் நீண்ட நாள்களுக்கு கெடாமல் பாதுகாக்க முடியும். இதற்குக் காளான்களை சுத்தமான நீரில் கழுவி உலர்த்த வேண்டும். சிறிதும் ஈரம் இருக்கக்கூடாது. தேவைப்பட்டால் சுத்தமான மெல்லிய துணியால் மென்மையாக துடைத்து எடுக்கலாம். முந்திரி, ஜாதிப்பத்திரி, பெருங்காயம், மிளகாய் ஆகியவற்றை வானலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு நல்லெண்ணெயைக் காய வைத்து அதில் காளான் துண்டுகளை இட்டு நன்கு வேக வைக்க வேண்டும். பின்னர் வறுத்து பொடி செய்ததை காளானில் ருசிக்கேற்ப உப்பு மற்றும் வினிகர் சேர்த்து கலக்கி இறக்கி, சூடு ஆறிய பின் சுத்தமான ஈரமற்ற பாட்டில்களில் நிரப்பி பாதுகாக்கவும். தற்போது பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் காளான் உற்பத்தி 7 மடங்காக பெருகியுள்ளது.
இந்நிலையில் காளான்களை பதப்படுத்தி பெரும்பாலும் டப்பாக்களில் அடைத்தும், ஊறுகாய் செய்து பதப்படுத்தி விற்பனை செய்தும் அதிக லாபத்தை ஈட்டலாம். மேற்கூறிய பதன் செய் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தரம் வாய்ந்த காளான்களை உற்பத்தி செய்து அவற்றினை பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டுக்கும், நமக்கும் பயனளிக்கும் என்பதில் சிறதளவும் கூட ஐயமில்லை.
ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

Over View

The MCA-Foundation Over View

Our Nation build by so many people . We support that people to improve growth of all the way of his life. We Conduct  Training Programme on “Mushroom Cultivation” Pudukkottai , trichy, Ramanathpuram

Procedure

காளான் வளர்ப்பு

காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் இது தருவதால்தான். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது.  இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கியமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது.

சிப்பிக்களானின் பருவம் மற்றும் இரகங்கள்

இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை.  எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.

இத்தொழிலை எப்படிச் செய்வது?

மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.

காளான் ரகங்கள்

நம் நாட்டின் காலநிலைக்கு உகந்தது இந்த ரகங்கள் : வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்)ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை

காளான் குடில் எப்படி அமைப்பது?

ஒன்றும் பிரமாதம் இல்லை. கூரைவேய்ந்த சாதாரண வீடே போதும். 16 அல்லது 18  சதுர மீட்டர் பரப்பு இருந்தால் போதுமானது. இதில் இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒன்று வித்து பரப்பும் அறையாகவும், மற்றொன்று காளான் வளர்க்கவும் தேவைப்படும்.
வளர்ப்பு அறையின் வெப்பநிலை : 23-250 செல்சியஸ் இருக்க வேண்டும்.
வித்து பரப்பும் அறையின் வெப்பநிலை: 25-300 செல்சியசும் வெப்பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு இந்த இரு அறைகளிலும் இருட்டு இல்லாமல், நல்ல காற்றோட்டத்தோடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
குடிலினுள் அத்தோடு 75-80% ஈரப்பதமும் இருக்க வேண்டும். இந்த அளவீடுகளை கணக்கிட தெர்மாமீட்டர் போன்ற ஈரப்பதத்தை கணக்கிட என கருவிகள் Electric shopகளில் கிடைக்கும்.

காளான் வித்து உருவாக்குவது எப்படி?

காளான் வித்து உருவாக்க ஏற்ற தானியங்கள்: மக்காச்சோளம், கோதுமை, சோளம்

வித்துக்களை எப்படி தயார் செய்வது?

மேற்குறிப்பிட்ட தானியங்களை அரை வேக்காடு வேகவைத்து காற்றில் உலர்த்த வேண்டும். அதனுடன் 2% சுண்ணாம்பும் கலந்து-  காலியான குளுக்கோஸ்(Empty clucose bottle) பாட்டில்களில் நிரப்ப வேண்டும். அடுத்து ஒரு தண்ணீர் உறிஞ்சாதப் பஞ்சை கொண்டு அடைக்க வேண்டும்.

அடுத்து அதிலுள்ள நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.

வேளாண் பல்கலைக் கழகம் அல்லது வேளாண் துறை உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியாக வைக்க வேண்டும்.

பிறகு 15-18 நாட்கள் வயதுடைய காளான் வித்தை காளான் தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு: இத்தனை சிரமத்திற்கு இப்போது காளான் வித்துக்களையும் விற்கிறார்கள். நல்லதரமான வித்துக்களை வாங்கி உபயோகிக்கலாம்.

காளான் படுக்கை எவ்வாறு அமைப்பது?

காளான் படுக்கை அமைக்க ஏற்ற பொருட்கள்:  கரும்புச்சக்கை, உமி நீக்கிய மக்காச்சோளக் கருது, வைக்கோல்

மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும்.  அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். கைகளால் வைக்கோலை எடுத்து பிழிந்தால் தண்ணீர் வராமல் இருக்க வேண்டும். கிட்டதட்ட 65% ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

காளான் பைகள் - படுக்கைகள் எப்படி தயார் செய்வது?

காளான் படுக்கைகள் தயார் செய்வதற்கு 60 X 30 செ.மீ அளவுள்ள , இருப்பக்கமும் திறந்த பாலீத்தின் பைகளை பயன்படுத்த வேண்டும். இருபக்கமும் திறந்த பைகள் என்றால் பாலீதீன் பையின் மூடிய பகுதியை கிழித்துவிடலாம்.

அந்த பாலித்தீன் பையை ஒருபுறம் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவில் இடையில் 2 ஓட்டை போடவேண்டும்.

வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட பாலீதீன் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும். இதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதைப்போலவே மாறி, மாறி பை முழுக்கவும் ஐந்து முறை செய்யவேண்டும்.  ஐந்து அடுக்குகள் வந்தவுடன் பையை நன்றாக இறுக்கி கட்டிவிட வேண்டும். இதற்கு ரப்பர்பேண்டை பயன்படுத்தலாம். பிறகு பாலீதீன் பையை குடிலினுள்   உள்ள பரண் போன்ற இருப்பில் கட்டித் தொங்க விடவேண்டும்.
விதைத்த பதினைந்து , இருபது நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருப்பதைக் காணலாம்.  பிறகு சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையைக் கிழிக்க வேண்டும்.

தினமும் கைத்தெளிப்பான் கொண்டு காளான்படுக்கையில் தண்ணீர் தெளிப்பது அவசியம்.

எவ்வாறு அடைவடை செய்வது?

பாலீதீன் பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்படும்.

இருபத்துமூன்று நாட்களில் காளான் முழுவளர்ச்சி அடையும். தண்ணீர் தெளிக்கும் முன்னரே காளான் அறுவடை செய்துவிட வேண்டும். தினமும் அறுவடை செய்யலாம். அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் உங்கள் விருப்பம் எதுவோ அப்படி அறுவடை செய்துகொள்ளலலாம்.

முதல் அறுவடைக்கு பின் ஒரு தகடு போன்ற பொருள் கொண்டு காளான் படுகையை இலேசாக சுரண்டுவிடுவதால்,  அல்லது பாலிதீன் பைகளின் நான்கைந்து துளைகளை கூடுதலாக இட வேண்டும். ஒவ்வொரு பெட்டிலிரந்து இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்து பயன்பெறலாம்.  ஒவ்வொரு பையிலிருந்தும் 600 கிராம் வரை காளானை அறுவடை செய்யலாம்.

எப்படி விற்பனை செய்வது?

அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். 200 கிராம் இருபது ரூபாய் என்ற விலையில் விற்கலாம். ஒரு கிலோ காளான் 100 ரூபாய்க்கும் விற்கலாம். அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு கொடுக்கலாம். காளானைக் கொண்டு பலவித உணவுப்பொருட்களை தயாரிக்கிறார்கள். எனவே இந்த காளான்களுக்கு எப்போதுமே அதிக கிராக்கி உண்டு.

முக்கிய குறிப்பு: அறுவடை செய்த காளான்களை ஒரு நாள் வரைக்கும் வெளியில் வைக்கலாம். குளிர்பதனப்பெட்டியில் என்றால் இரண்டு நாட்கள் வரைக்கும் வைக்கலாம். இரண்டிற்கு மேற்பட்ட நாட்கள் வைத்திருந்தால் அவை அழுகி கெட்டுவிடும்.

செலவும் மூலதனமும் மிக குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது. வீட்டிலிருந்தபடியே நமது வருமானத்தை பெருக்கிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகவும், சிறுதொழிலாகவும் விளங்குகிறது.
ஆதாரம் : ஸ்டார் குளோபல் அக்ரி பார்ம்ஸ், தர்மபுரி